விவாகரத்து சட்டம்


சட்டம் உன் கையில்

பொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
Naveen Kohli Vs Neelu Kohli (AIR 2006 SC 1675)
ஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒரு மனைவி அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர் மீது, ‘கம்பெனி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால் அவருடன் கம்பெனி சார்பில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்’ என்று நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டதை மேற்கோள் காட்டி, ‘மனதளவிலான கொடுமை’ என்று அந்தக் கணவர், மனைவி மீது விவாகரத்து மனு தாக்கல் செய்தார். இதன் தீர்ப்பில் தாம்பத்யத்தில் கணவனோ மனைவியோ சுயநலமாகவோ, கஞ்சத்தனமாகவோ, வெறுப்பூட்டும் வகையிலோ அல்லது சிறு கோபத்தின் வெளிப்பாடாக சிறுமையுடன் நடந்து கொள்வது, திருமண உறவு நீர்த்துவிட்டதைக் காட்டுகிறதே தவிர, ‘மனக்கொடுமை’ என்று கூற இயலாது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த மனைவி வீம்புக்காகவே தொடர முடியாத திருமண உறவை தொடர நினைப்பது யாருக்கும் எந்த பயனையும் தரப்போவதில்லை என்று கூறி விவாகரத்து வழங்கியது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையே, ‘முறிந்து மீள முடியாத திருமண பந்தத்தைத் தொடர இயலாத நிலை’யையும் விவாகரத்துக்கு அடிப்படைக் காரணமாக கொண்டுவர, பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய காரணமாக அமைந்தது. அந்த மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.
Kamaleshwar Bai Vs Peelu Ram Sahi
மனைவி தனக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, வரதட்சணைக் கொடுமை போன்றவற்றுக்காக சட்டப்படி புகார் கொடுப்பதை விவாகரத்துக்கான மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறுகிறது.
Usharani Lenka Vs Panigrahi Subash Chandra Dash
கணவன், தன் மனைவி மீது தங்கள் திருமணத்துக்கு முன்னர் யார் மூலமாகவோ கருவுற்று கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் திருமணம் செல்லாது என்று கூறும் ஒரு வழக்கு... மேலும், தன் மனைவி தொடர்ந்து பல ஆண்டு காலம் தன்னுடன் எந்தவித திருமண உறவிலும் ஈடுபடாதது விவாகரத்துக்கான மனக்கொடுமை என்ற அடிப்படைக் காரணமாகவும் காட்டி விவாகரத்துக்கான ஒரு வழக்கும் தாக்கல் செய்தார். வழக்கின் தீர்ப்பில் எந்த முகாந்திரமோ, சாட்சியமோ இல்லாமல் ஒரு பெண்ணின் மீது அவதூறு கூறுவது தவறு என்ற கண்டனத்தை பதிவு செய்தது.
ஆனால், ‘தாம்பத்ய உறவு மறுக்கப்பட்டது மனக்கொடுமைதான்’ என்பதை ஏற்று, மனைவியின் வாழ்வாதாரத்துக்கு நிதி நிவாரணம் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தகுந்த காரணம் இன்றி பிரிந்து செல்லுதல்... குறிப்பிட்ட காலம் வரை இணையாமல் இருத்தல் கணவனோ, மனைவியோ தகுந்த காரணமில்லாமல் மனைவியையோ, கணவரையோ விட்டுப் பிரிந்து செல்லுதல். இவ்வாறு பிரிந்து செல்லும் நபர் திருமண உறவில் தனக்கு இருக்கும் சட்டப்படியும் தர்மப்படியுமான கடமையிலிருந்து தவறுவது ஆகும். ஒருவேளை பிரிந்து இருப்பதற்கான தகுந்த காரணத்தை எதிராளி காண்பிக்கும் வேளையில், இந்தப் பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படும் விவாகரத்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படலாம்.
Vikas sharma Vs Anita Sharma
திருமணமான பெண் கணவருடன் இணைந்து வசிக்க விரும்பினாலும், கணவர் இல்லாமல் அவரின் பெற்றோருடன் வசிக்க விரும்பாதது சட்டப்படி இணையாமல் இருத்தல் என்று கூற முடியாது என்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்ளும்போது இருக்கும் மதத்தை மாற்றி வேறு மதம் ஏற்றுக் கொள்ளுதல் ஆணோ, பெண்ணோ தான் திருமணம் செய்து கொள்ளும்போது பின்பற்றிய மதத்திலிருந்து, அந்தத் திருமணம் நிலுவையிலிருக்கும் போதே வேறு மதத்துக்கு மாறுவதால், ஒரு வேளை அந்தத் திருமண உறவில் சிக்கல் ஏற்பட்டால், இந்தக் காரணத்துக்காகவும் விவாகரத்து கோரலாம். இந்த அடிப்படைக் காரணம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு பொருந்தாது.
மனநலப் பாதிப்பு... மனநலம் சம்பந்தப்பட்ட நோய் சிறு கோபமோ, மன அழுத்தமோ மனநலப் பாதிப்பு அல்ல. தொடர்ந்து கட்டுக்கு அடங்காமல், தன்னையும் அறியாமல் செய்யும் செயல்கள் மருத்துவ ரீதியாக மனநலப் பாதிப்பு என்று சான்று அளிக்கப்படக்கூடியவை இதன் கீழ் அடங்கும்.
Hema Reddy Vs Rakesh Reddy
மனைவியின் தொடர் அமைதி அல்லது அவரின் கணவரின் குடும்பத்தாருடன் நல்ல முறையில் பழகாதது அல்லது கையைக்கொண்டு தலையை சொரிந்து கொண்டிருக்கும் விதம் போன்றவற்றை மனநலப் பாதிப்பு என்று கூற இயலாது. மேலும் இந்த வழக்கில் அந்தப் பெண் தன் தாயார் தவறிய காரணத்தினால் சிறிது காலம் கவலையில் இருந்தார். இந்நிலையை மனநோய் என்று கூற இயலாது. இதற்காக விவாகரத்து கொடுப்பது இயலாது.
தொழுநோய் கொடிய தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் துணையுடன் தொடர்ந்து திருமண உறவை தொடர விருப்பம் இல்லாவிட்டால், அதற்கான போதிய மருத்துவ சான்றிதழ்களோடு விவாகரத்து கோரலாம்.
Swarajya Lakshmi Vs G.G.Padma Rao
திருமணத்தைத் தொடர்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட பிறகு தன் மனைவிக்கு தொழுநோயும் காசநோயும் இருப்பதற்கான போதிய மருத்துவ சான்றிதழ் பெற்று, தொடர்ந்து அந்த மனைவியுடன் வாழ்வது தனக்கும் குழந்தைக்கும் ஆபத்தும் நோய் தொற்றிக்கொள்ளும் அபாயமும் இருப்பதால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட கணவனின் மனு, மனிதாபிமான அடிப்படையில் கீழமை நீதிமன்றங்களில் விவாகரத்துக்கு மறுக்கப்பட்டாலும், மேல் முறையீட்டில், இவ்வாறு இருக்கும் நோயாளிகளுடன் தொடர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடகட்டாயப்படுத்த முடியாது என்று விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
பாலியல் நோய்
உடல் உறவின் மூலம் தொற்றிக்கொள்ளும் பாலின நோய்கள், எய்ட்ஸ் போன்றவற்றின் மூலம் பாதிக்கப்பட்டிருப்பின் அந்தக் காரணத்துக்காக விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். உலக வாழ்வை துறந்து துறவறம் மேற்கொள்ளுதல் திருமணமான ஆணோ, பெண்ணோ இல்லற வாழ்வை துறந்து, சந்நியாசம் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதன் மூலம் பாதிக்கப்படும் துணை, இந்த அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து கோரலாம். இந்து திருமணச் சட்டத்தில் மட்டுமே இது விவாகரத்துக்கான ஒரு அடிப்படைக் காரணம். உயிருடன் இருப்பதற்கான 7 ஆண்டுகள் வரையில் கேள்வியுறாமல் இருப்பது ஒரு தனிநபர் திருமண பந்தம் நிலுவையில் இருக்கும் போது, 7 ஆண்டுகள் வரை எங்கே இருக்கிறார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை என்றாலும், அவர் உயிருடன் இருப்பதற்கான எந்தச் சான்றும் ஆதாரமும் யாராலும் சமர்ப்பிக்கப்பட இயலாத பட்சத்திலும், பாதிக்கப்பட்டவர் இந்த அடிப்படைக் காரணத்துக்காக விவாகரத்து கோரலாம்.
தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பின் ஒரு ஆண்டுக்கு மேல் ஒன்று சேராமல் இருத்தல் கணவருக்கோ, மனைவிக்கோ எதிராக தற்காலிக நீதிமன்ற பிரிவினை அல்லது சேர்ந்து வாழ்வதற்காக தாக்கல் செய்யப்படும் மனு, அவருக்கு சாதகமாக தீர்ப்பாகி ஒரு ஆண்டுக்குப் பிறகும் இருவரும் திருமண பந்தத்தில் இணையாத பட்சத்தில், யாரேனும் ஒருவர் அதன் அடிப்படையில் விவாகரத்து மனு தாக்கல் செய்யலாம்.
கிரிமினல் குற்றத்துக்காக 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை பெறுதல்
ஒரு நபர் திருமண உறவில் இருக்கும்போது 7 ஆண்டுகளோ அதற்குக் கூடுதலாகவோ கடுங்காவல் சிறைத்தண்டனை பெறும் குற்றம் இழைப்பின், பாதிக்கப்பட்ட துணை விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ய, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமண ரத்து சட்டத்தின் கீழ் ஒரு அடிப்படைக் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
திருமண - உடல் உறவில் ஈடுபடாமல் இருத்தல்
திருமணத்தின் அடிப்படையே அடுத்த சந்ததியினரை உருவாக்குவதே. அதற்கு மனதளவிலும் உடலளவிலும் முழு ஈடுபாடு அவசியம். கிறிஸ்தவர்களுக்கான 1969 விவாகரத்துச் சட்டத்திலும், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும் தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் தவிர்ப்பது விவாகரத்து கோர அடிப்படைக் காரணமாக உள்ளது.
பெண்களுக்கு மட்டுமே ஆனவை...
விவாகரத்து கோர ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான உரிமை உண்டு. இருப்பினும், சில அடிப்படைக் காரணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரையறுக்கப்பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறிய தவறான உறவு மேற்கொள்ளுதல் (ஆண் ஆணுடனோ, மிருகத்துடனோ உடலுறவு வைத்துக்கொள்ளுதல்).
ஒரு திருமணம் சட்டப்படி நிலுவையில் இருக்கும் பொழுதே மறுமணம் செய்து கொள்ளுதல்.
இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஜீவனாம்சம் பெற்றுக்கொண்டு இருந்தும் கணவன் திருமண உறவில் ஈடுபடாமல் அதற்கான கடமை ஆற்றாமல் இருக்கும் போது... இந்து திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம். ஒரு பெண் 15 வயதுக்குள் திருமணம் செய்து வைக்கப்பட்டால் அவள் 18 வயதுக்கு முன் அதனை ரத்து செய்ய கோருதல்... இந்து திருமணச் சட்டம் மற்றும் 1939ம் ஆண்டு இயற்றப்பட்ட இஸ்லாமிய திருமணங்கள் ரத்து சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவர் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
ஒரு சில நேரங்களில் தங்களுடைய திருமண உறவு தொடர்வதனால் எந்தப் பயனுமே இல்லை என்று நினைக்கும் தம்பதி, ஒருமனப்பட்டு விவாகரத்து மனு தாக்கல் செய்யவும் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகிய அனைத்துச் சட்டங்களின் கீழும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் கணவர், மனைவி இருவரும் விவாகரத்துக்கு முழுமனதுடன் சம்மதித்து அவர்களுடைய ஜீவனாம்சம், எதிர்கால வாழ்வாதாரம், குழந்தை இருப்பின் அவற்றின் காப்பாளர் உரிமை, அவரவர் சொத்தின் மேலுள்ள உரிமை ஆகியவற்றை முடிவு செய்து, ஒரு தீர்வு கண்ட பின், இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் விவாகரத்து வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து இறுதி விசாரணைக்கு 6 மாத கால அவகாசம் அளிக்க அனைத்துச் சட்டங்களும் வகை செய்துள்ளது. இந்தக் கால அவகாசம் கொடுப்பதற்கான அடிப்படைக் காரணம் - தம்பதி தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமையை மறந்து ஒன்றுகூட இந்த கால அவகாசம் உதவலாம் என்ற எண்ணமே. இந்த மனமொத்த விவாகரத்து மனு தாக்கல் செய்த தினத்திலிருந்து 18 மாதங்கள் மட்டுமே நிலுவையில் இருக்கும். அதற்குள் விவாகரத்து பெறாவிடில் தள்ளுபடி செய்யப்படலாம். அது போல 6 மாத கால அவகாசம் முடிந்து வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் போது இருவரில் யாரேனும் ஒருவர் விவாகரத்துக்குச் சம்மதிக்காத பட்சத்திலும் வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம். பெரும்பாலானோர் இந்த கால அவகாசம் தேவையற்றது என்று எண்ணுவதன் காரணத்தினால், திருமணச் சட்டங்களுக்கான சட்ட திருத்த மசோதாவிலும் இயற்றப்பட்டுள்ளது.
விவாகரத்து மனு தாக்கல் செய்ய விரும்புபவர் மனதில் இருத்திக்கொள்ள வேண்டியவை...
1. மனநல ஆலோசகரையோ, குடும்ப நல ஆலோசகரையோ சந்தித்தால் தீர்வு கிடைக்குமா என்று யோசித்தல்.
2. முடிவில் விவாகரத்து அவசியமெனில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யலாம்.
3. வழக்குக்கான அடிப்படை தஸ்தாவேஜுகள் - அதாவது, திருமண பத்திரிகை, திருமண பதிவு சான்றிதழ், திருமணத்தின் போது எடுத்த புகைப்படம், கணவனும் மனைவியுமாக வாழ்ந்ததற்கான விலாச ஆதாரம், குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ், எதிர் தரப்பினர் செய்யும் தவறினை சுட்டிக்காட்டுவதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தயாராக உள்ளதா என்று கவனித்தல்.
4. கணவனுக்கோ, மனைவிக்கோ சேரக்கூடிய சொத்துகள், நகை மற்றும் தனிப்பட்ட பொருள்கள், அவருக்குச் சேர வேண்டிய தஸ்தாவேஜுகள், அவருக்குச் சேர வேண்டிய விலையுயர்ந்த ஆபரணங்கள் இருப்பின் அவற்றுக்கான பட்டியல் தயாரிப்பது அவசியம்.
5. விவாகரத்து வழக்கை கையாளும் நல்ல வழக்கறிஞரின் முகவரியை பெற்று அவரிடம் ஆலோசனை பெறுதல்.
நம் நாட்டில் தன்னிச்சையாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் நிறைவாக மனமொத்த விவாகரத்து மனுவாக முடிவு பெறும் வாய்ப்புகள் அதிகம். ஒரு நல்ல தாம்பத்ய வாழ்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போவது, பரஸ்பர புரிதல், மரியாதை போன்றவை. எந்த ஒரு தம்பதியும் சிறு சண்டை கூட இல்லாமல் தாம்பத்யம் நடத்துவது கனவிலும் நடைபெறாத ஒன்று. திருமண உறவில் சிறு சிறு பூசல்கள் வரும்போது அவற்றை பெரிய சண்டைகளாக மாற்றி நல்லறமாக இருக்கும் இல்லற வாழ்வை சீர்குலைக்காமல் இருப்பது நலம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லும் திருமணங்களை நரகங்களாக்கிக் கொண்டு நீதிமன்ற கதவுகளைத் தட்டுவது போன்ற பேதமை செயல் வேறொன்றும் இல்லை!
எழுத்து வடிவம்: சாஹா
நன்றி குங்குமம் தோழி

Comments