உண்மை ஊமையாகி தலைகவிழ
பொய் சபையிலேறி இறுமாப்புடன்
சப்தமிட்டு சிரிக்கும்
வானுக்கு தூணுண்டு என்பதையும்
கடலுக்கு தாழ் உண்டு என்பதையும்
வக்கீலின் வாதத் திறமை நிரூபிக்கும்
உடைமை கொள்ள, உயிர் கொல்ல
இடையில் மறைத்த உடைவாளை
இரக்கமின்றி இதயத்தில்
பாய்ச்சுவான் ஒருவன்
பிறர் உயிர் துடிக்க சகியாது
அதை ஓடி வந்து பிடுங்கி
காப்பாற்ற நினைப்பான்
கருணையுள்ள ஒருத்தன்
கடைசியில் கருணை மனிதனை
காக்கிச் சட்டைகள்
அள்ளிக் கொண்டு
சிட்டாய்ப் பறக்கும்
கடுங் காவலில் வைக்கும்
நீதியை வேண்டி
கறுப்புக் கோட் வாதாட
காக்கிச் சட்டைகள்
கண்ணால் கண்டதைச் சொல்லும்
அந்தக் கைதிக்கோ இவர்கள்தான்
கடவுள் அன்று
கைரேகை சாட்சியம்
கருணை உள்ளவனை
காட்டிக் கொடுக்க
கட்டியங் கூறும்
கம்பியின் பின்னால்
கைதியாய் அவன் நிற்க
சட்டைப் பைக்குள் துட்டைத் திணித்து
சட்டத்தை விலைக்கு வாங்கி
தப்பித்து விடுவான்
சமர் செய்த சண்டாளன்
“தகுந்த சாட்சியம் இல்ல”
சட்டம் சப்தமின்றி உறங்கிப் போகும்.

Comments