நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி?


 ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும். நுகர்வோருக்கான நஷ்ட ஈட்டையும் பெற முடியும். இதற்காக 24 டிசம்பர் 1986 அன்று கொண்டுவரப்பட்டது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம். நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நுகர்வோர் என்பவர் யார்?

ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.

உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.

யார் / யாரெல்லாம் புகாரளிக்கலாம்?

ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.

ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.
ஏன் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க வேண்டும்?

காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.

நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.

எங்கே புகாரளிப்பது?

நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து, இதற்கான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பொருள் மதிப்பிற்குத் தகுந்தவாறு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, விரைவுத் தபால் மூலமாகவோ வழக்குகளைப் பதிவு செய்து, இந்த வழக்கின் நகலை எதிர்த்தரப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

கட்டணம் எவ்வளவு?

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = a100 /-
1 லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள்:

· புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.

· சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.

· எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து
ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.

யார் மீதெல்லாம் புகாரளிக்க முடியும்?

நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.

ஆன்லைனில் புகாரளிக்க:

· நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின்படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.

· மாநில நுகர்வோர் உதவி மையத்தின் தொடர்பு எண் 044 – 2859 2828. இந்த எண்ணுக்கு அழைத்ததும் 9 என்ற எண்ணை அழுத்தினால், புகார்களை தெரிவிக்கலாம். 1 என்ற எண்ணை அழுத்தினால், நுகர்வோருக்கான உரிமைகள் என்ன? நுகர்வோரின் கடமைகள் என்ன போன்ற விவரங்களைப் பதிவு செய்யப்பட்ட குரலில் கேட்கலாம்.

· consumer@tn.gov.in, schtamilnadu@gmail.comஎன்ற மின்னஞ்சலிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, 4-ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபாலிலோ, நேரிலோ புகார் அளிக்கலாம். www.consumer.tn.gov.in என்கிற இத்தளத்திற்கும் செல்லலாம்.

விரிவான விளக்கங்களை உதாரணங்களுடன், ‘புதிய தலைமுறை’ வெளியிட்டிருக்கும் ‘கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும்’ என்ற நூலில் தெரிந்துகொள்ளலாம். இந்தப் புத்தகத்தை தபாலில் பெற 044-45969717 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Comments

Post a Comment