இந்தியாவில் சிறுவர் வயதெல்லை குறைப்பு!

குற்றவழக்குகளில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்படும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டோரையும் பெரியவர்களாக கருதும் வகையிலான சட்ட மசோதாவை லோக்சபாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று அறிமுகம் செய்தார். 
தற்போதுள்ள சட்டப்படி 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் வரைதான் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவர்கள் இருக்க முடியும். இந்நிலையில் நாட்டில் தற்போது நடைபெறும் பெரும்பாலான பலாத்கார குற்றங்களில் 18 வயதுக்கும் கீழுள்ளோர் அதிகம் ஈடுபடுவதை போலீஸ் விசாரணைகளில் தெரியவந்தது. 
டெல்லி நிர்பயா வழக்கும் இதற்கு ஒரு உதாரணம். பெருங்குற்றங்களில் ஈடுபடுவோரையும் சிறுவர்கள் என்று காரணம் காண்பித்து விடுதலை செய்வது நியாயமற்றது என்ற குரல்கள் நாடெங்கும் ஒலிக்க தொடங்கின. இதையடுத்து சிறுவர் நீதி பேணல் மற்றும் பாதுகாப்பு சட்டம்-2014 என்ற சட்ட மசோதாவை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தயாரித்துள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த மசோதா லோக்சபாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 
அமைச்சர் மேனகா காந்தி சட்ட மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார். இதன்படி, கொலை, பலாத்காரம் உள்ளிட்ட கொடுஞ்செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயதுக்கிடையேயான வயதுள்ள சிறுவர்களை எந்த சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் சிறுவர் நீதி வாரியத்துக்கு அளிக்கப்படுகிறது. குற்றவாளியை சிறுவர் நீதிமன்றத்துக்கு அனுப்புவதா அல்லது வழக்கமான நீதிமன்றத்துக்கு அனுப்புவதாக என்ற முடிவை எடுக்க நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டம். அதே நேரம், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவெடுத்தாலும்கூட, குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அளிக்க முடியாது.


Comments