வரதட்சணை கொடுமை... தாயின் உடலை அனைத்தபடியே தூக்கில் தொங்கிய குழந்தை..!

வரதட்சணை கொடுமை... தாயின் உடலை அனைத்தபடியே தூக்கில் தொங்கிய குழந்தை..!


அரக்கோணம் அருகே வரதட்சணை கொடுமையால் குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (32). சென்னை பெரம்பூர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (22). இவர்களுக்கு அஸ்வதி என்ற பெண் குழந்தை உள்ளது. ரம்யாவின் திருமணத்தின் போது 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.

ஆனால், அதுபோதாது என்று கூறி ரம்யாவின் மாமியார் வரதட்சணை கேட்டு தினமும் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த சில நாட்களாக ரம்யா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக பெற்றோரிடம் கூறி ரம்யா கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, கணவர் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டார். மாமியார், மாமனார் வெளியில் சென்றுவிட்டனர். வீட்டில் ரம்யாவும், குழந்தை அஸ்வதி மட்டும் இருந்தனர்.


இதனையடுத்து, வீட்டில் இருந்த குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டும் கொக்கியில் புடவையை மாட்டி ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்று வீடு திரும்பிய மாமனார், மாமியார் வீட்டுக்கதவை நீண்ட நேரமாக தட்டியும் ரம்யா திறக்காததால் சந்தேகம் அடைந்தனர். உடனே, அக்கம், பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குழந்தையும், தாயும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments